Published : 07 Jul 2022 03:45 PM
Last Updated : 07 Jul 2022 03:45 PM

பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த கட்டுப்பாட்டு அறை: தெளிவு பெற நாடவேண்டிய எண்கள்

சென்னை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்காக 2018, 2021 மற்றும் 2022-ல் திருத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதிகள், 2021 இன் விதி 4 (2) பின்வருமாறு கூறுகிறது: பாலிஸ்டைரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன் உட்பட பின்வரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியன ஜூலை 1 ஆம் தேதி 2022-ம் ஆண்டு முதல் தடைசெய்யப்படும்.

(i) பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டைரீன் (தெர்மாகோல்)

(ii) தட்டுகள், கோப்பைகள், குவளைகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுகுழல்கள், தட்டுகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இனிப்பு பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள், கிளரிகள்

மேலும், ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட உபயோபடுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், உற்பத்தி, சேமித்தல், விநியோகம், எடுத்து செல்லுதல், விற்பனை அல்லது விநியோகம் செய்ய 01.01.2019 முதல் தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

எனவே, அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்களும் இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தத்தைக் கவனத்தில் கொண்டும் தமிழக அரசின் அரசானையினை கருத்தில் கொண்டும் அறிவிப்புக்கு இணங்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதிகள், 2021ன், விதி 12-ன் படி, இவ்விதிகளை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரையறுக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இக்கட்டுப்பாட்டு அறை அனைத்து நாட்களிலும் வரும் 2022 ஜூலை 31-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் மற்றும் தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறை வழங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x