Published : 07 Jul 2022 01:05 PM
Last Updated : 07 Jul 2022 01:05 PM

ஈரோட்டில் விவசாயி உயிரிழப்பிற்கு காரணமான ஒற்றை யானை: வனத்துக்குள் விரட்ட கும்கி ‘சின்னத்தம்பி’ வருகை

கும்கி சின்னத்தம்பி

ஈரோடு: தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில், விவசாயி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட இரு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லப்பா (68). இவருக்கு தர்மாபுரம் பகுதியில், விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்பொது வாழை பயிரிட்டுள்ளார். செவ்வாய்கிழமை இரவு இவரது வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றையானை, நூற்றுக்கும் மேற்பட்ட வாழைமரங்களைச் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு அங்கு வந்த மல்லப்பாவைத் தாக்கிய யானை, அவரைத் தூக்கி வீசி, காலால் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் திரும்பியது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து தாளவாடி - திகினாரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆசனூர் டிஎப்ஓ தேவேந்திரகுமார் மீனா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை, தொடர்ந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மல்லப்பா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனை வனத்துறையினர் ஏற்றதைத் தொடர்ந்து, உடனடி நிவாரணமாக ரூ ஒரு லட்சத்தை வழங்கினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மல்லப்பாவின் உடல் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆசனூர் டிஎப்ஓ தேவேந்திரகுமார் மீனா கூறியதாவது

ஒற்றை யானை நடமாட்டம் உள்ள தாளவாடி, ஜீரஹல்லி பகுதியில் கூடுதல் வனத்துறையினர் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில், யானை வருவதைத் தடுக்க, 3. 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி அமைக்கும் பணியும், சோலார் மின்வேலி அமைக்கும் பணியும் இன்று தொடங்கவுள்ளது. மனித -விலங்கு மோதலைத் தடுக்க வனத்துறை அமைத்துள்ள குழுவிற்கு இரு வாகனங்கள் வழங்கப்படும். இக்குழுவினருக்கு மேட்டுப்பாளையத்தில் பயிற்சி வழங்கப்படும். வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்புகள், சேதம் நிகழும் போது அதிக இழப்பீட்டுத்தொகையை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தாளவாடி பகுதியில் சுற்றும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட இரு கும்கி யானைகள் வரவழைக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை யானைகள் முகாமில் இருந்து, சின்னத்தம்பி என்ற கும்கி யானை இன்று காலை தாளவாடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. ராஜவர்தன் என்ற மற்றொரு கும்கி யானை இன்று மாலை வரவழைக்கப்பட உள்ளதாகவும், இரு யானைகளைக் கொண்டும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி இன்று மாலை முதல் தொடங்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x