Last Updated : 07 Jul, 2022 09:05 AM

 

Published : 07 Jul 2022 09:05 AM
Last Updated : 07 Jul 2022 09:05 AM

மீண்டும் அதிகரிக்கும் தக்காளி விலை: மேலும் விலை உயரும் என விவசாயிகள் நம்பிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சந்தையில் வெளி மாநிலங்கள், மாவட்டங் களுக்கு ஏற்றுமதிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளி பழங்கள்.

ராயக்கோட்டை சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, ராயக்கோட்டை தக்காளி சந்தை, ஓசூர், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ராயக்கோட்டை தக்காளி மண்டியில் இருந்து நாள்தோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிரேடு தக்காளி ஏற்றுமதியாகிறது. ஒரு கிரேடு என்பது 25 கிலோ எடை கொண்டதாகும். ஓரிரு மாதங்களுக்கு முன்பு தக்காளி விளைச்சல் அதிகரித்து, 25 கிலோ எடை கொண்ட தக்காளி ரூ.2,500-க்கும் குறையாமல் விற்றது. கடந்த மாதம் படிப்படியாக தக்காளி விலை சரிந்து ஒரு கிரேடு ரூ.200-க்கும் கீழ் விற்பனையானது.

இந்நிலையில் மீண்டும் தக்காளி விலை படிப்படியாக உயரத் தொடங்கி, நேற்று ராயக்கோட்டை சந்தையில் தக்காளி ஒரு கிரேடு ரூ.350-க்கு விற்பனையானது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் தக்காளி செடிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்தது.

பின்னர், விளைச்சல் அதிகரித்து விலை சரிந்தது. தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. எங்களிடம் வியாபாரிகள் ரூ.15-க்கு கொள்முதல் செய்து, வெளி மார்க்கெட்டில் ரூ.20 வரை விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை தொடர்ந்து உயரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x