Published : 07 Jul 2022 04:10 AM
Last Updated : 07 Jul 2022 04:10 AM

ஹிஜாப் ஆர்ப்பாட்டங்களில் நீதிபதிகளை மிரட்டிய வழக்கில் 7 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை

மதுரை, திருவாடானையில் நடந்த ஹிஜாப் ஆர்ப்பாட்டங்களில் நீதிபதிக ளுக்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ரஹமத்துல்லா என்பவர் நீதிபதிகளை மிரட்டும் தொனியில் பேசினார். இதுதொடர்பாக மதுரை அசன்பாட்ஷா, அபிபுல்லா உள்ளிட்ட பலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அசன்பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ஹிஜாப் தீர்ப்பைக் கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த அடிப்படையில்தான் கோரிப் பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனி உமர் கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனு தாரர்கள் தரப்பில், இனிமேல் இவ்வாறு பேசமாட்டோம் எனத் தனித் தனியாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில், அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் மீண்டும் குற்றம்புரிய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் , மதுரை மனுதாரர்கள் 2 பேருக்கும், திருவாடானை வழக்கில் 5 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி அவர்கள் மறு உத்தரவு வரும் வரை முறையே தல்லாகுளம் மற்றும் திருவாடானை காவல் நிலையங்களில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி கே. முரளிசங்கர் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x