Published : 06 Jul 2022 07:27 AM
Last Updated : 06 Jul 2022 07:27 AM

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறார் திரைப்பட விழா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் வகுத்துள்ளது.

காட்சி ஊடகத்தின் வாயிலாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை காண வைப்பதும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம். அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும்.

கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், கதை நடக்குமிடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ‘ஸ்பாட்லைட்’ என்ற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிக்கும் ஒருவருக்கும் அணி ஒன்றுக்கும் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதிநிகழ்வு, மாநில அளவில் ஒருவாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இச்செயல் பாட்டுக்கென ‘சில்வர் ஸ்க்ரீன் ஆப்’ என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, அதன் வாயி லாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x