“தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்” - நயினார் நாகேந்திரன்

“தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்” - நயினார் நாகேந்திரன்
Updated on
1 min read

திருநெல்வேலி: "தமிழகத்தை 117 சட்டமன்ற தொகுதிகள் வீதம் இரண்டாக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தால், இரண்டு இடங்களிலும் பாஜக வெல்லும்" என்று பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாளையங்கோட்டை பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில், நயினார் நாகேந்திரன் பேசியது: "திமுக நாடாளுமன்ற உறுப்பினர், தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கிறார். அவர் தனி ஆளாகத்தான் நின்று கேட்கிறார்.

ஆ.ராசாவுக்கு இருக்கும் ஆசை நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் இல்லாமலா போய்விடும். நானும் கேட்பேன், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டுமென்று. 234 தொகுதிகள் இருக்கு. அதை 117, 117 ஆக பிரிப்போம். நாங்களும் முதல்வர்களாக இரண்டு இடங்களிலும் வந்துவிடுவோம். தமிழகத்தின் தென் பகுதியிலும் முதல்வராக வருவோம். வட பகுதியிலும் முதல்வராக வருவோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து வந்துவிடுவோம், பாண்டிய நாடு, பல்லவ நாடு.

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்காதீர்கள். இரண்டு 117 தொகுதிகளிலும் பாஜக ஆட்சிக்கு வரும், அல்லது எங்களது கூட்டணிக் கட்சியினர் முதல்வராக வருவர். அவ்வாறு செய்ய முடியாது என்று நினைத்துவிடாதீர்கள், செய்யக்கூடிய இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் முடியும்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in