Published : 05 Jul 2022 11:44 AM
Last Updated : 05 Jul 2022 11:44 AM

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: சிங்களப் படைகள் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த கைது படலமும், அத்துமீறலும் நடந்திருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பும், கண்டனமும் சிங்கள அரசை அசைத்துக்கூட பார்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மீனவர்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்; இனி கைது கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்.

கடந்த இரு நாட்களில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விடுவிக்கவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வங்கக் கடல் மீன்பிடி உரிமையை காக்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x