Published : 04 Jul 2022 03:01 PM
Last Updated : 04 Jul 2022 03:01 PM

இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: "61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது" என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (ஜூலை 3) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழக முதல்வர், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று (ஜூலை 4) கடிதம் எழுதியுள்ளார்.

15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று தமிழக முதலவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x