Published : 04 Jul 2022 04:38 AM
Last Updated : 04 Jul 2022 04:38 AM

முதல்வர் தலைமையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இவற்றின் மூலம் ரூ.70 ஆயிரம் கோடிக்கு முதலீடு ஈர்க்கப்படுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் அவ்வப்போது, முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்தி வருகிறது. இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துவந்தார்.

திமுக அரசு அமைந்து ஓராண்டுநிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை ரூ.94,925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன என்றும், இதன்மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின்சார்பில் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களால் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு கிடைக்கும் என்றும், இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தொழில்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாநாட்டில், 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர, பணிகள் நிறைவடைந்துள்ள 12 திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x