

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள நம்மியம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் செவத்தான். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் சிவகாசி(15). இவர், ஜமுனாமரத்தூர் வட்டத்தில் உள்ள அரசவெளி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி, 10-ம் வகுப்பு படித்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் செவத்தான் புகார் அளித்தார். அதில், ‘கடந்தமாதம் 28-ம் தேதி ஆசிரியை மகாலட்சுமி எங்களை தொடர்பு கொண்டு, சிவகாசியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறினார். பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, மகனின் முகம் வீங்கி இருந்தது. முகப்பருவை அகற்றுவதற்காக, ஊசியால் ஆசிரியை மகாலட்சுமி குத்தியதால் முகம் வீங்கியது என தெரிவித்தான்.
நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், சிவகாசி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். ஆசிரியை மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். ஜமுனாமரத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.