Published : 02 Jul 2022 06:57 AM
Last Updated : 02 Jul 2022 06:57 AM

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி குறைவு: தரமான புத்தகங்கள் வழங்க கல்வியாளர்கள் வலியுறுத்தல்

திருச்சி: மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் 2021-22-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்களை பள்ளிக் கல்வித்துறை ஆராய்ந்து, அதைநிவர்த்தி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும்.

பெரம்பலூர் முதலிடம்

இதில் 2020-21-ம் கல்வியாண்டில் தமிழகத்திலிருந்து ஏறத்தாழ 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். அண்மையில் வெளியான தேர்வின் முடிவில்,தமிழகத்திலிருந்து வெறும் 5,900பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 527 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசு உதவித் தொகைவழங்க தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ள அதிகபட்ச மாணவர்கள் எண்ணிக்கை 6,695. ஆனால், இந்த ஆண்டு 5,900 பேர் மட்டுமேதேர்ச்சி பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் சி.சிவக்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தேசிய வருவாய் வழி மற்றும்திறனறி தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்ததற்கு கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும், இனியும் தேர்ச்சி எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இதுபோன்ற திறனறித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு 7-ம் வகுப்பு முதலே பயிற்சிகளை தொடங்க வேண்டும். இதற்கு முன்னதாக ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதும் அவசியம். இந்த தேர்வுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தரமான புத்தகங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேரும்போது உதவித்தொகை தடையின்றி கிடைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கும் கிடைக்கும் என்றார்.

கடந்த ஆண்டு இது தொடர்பாக‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்திவெளியான பிறகு, திறனறி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். எனவே, புத்தகங்களை விரைந்து வழங்கினால், அது வரும் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பெரிதும்பயனளிக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x