Published : 02 Jul 2022 06:45 AM
Last Updated : 02 Jul 2022 06:45 AM

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதற்கு காரணமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடிசொத்து குவித்ததாக மற்றொரு வழக்கையும் லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்தது.

இந்த 2 வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த விசாரணை, தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது வேலுமணி தரப்பில் மத்தியஅரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ வாதிட்டார்.

இதையடுத்து, மனுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என்பது தொடர்பாக அறப்போர் இயக்கம், திமுக மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் தரப்பில் ஜூலை 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுவரை இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணிதரப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x