Published : 30 Jun 2022 04:59 AM
Last Updated : 30 Jun 2022 04:59 AM

சமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் - ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: சமூகநலத் துறை சார்பில் குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பாக ரூ.7.32 கோடியில் 3 திட்டங்களை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், சமூகநலத் துறை அமைச்சர் இந்த ஆண்டுக்கான துறையின் மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அறிவிப்புகள் வெளியிட்டார்.

அதில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ரூ.85 லட்சம் செலவில் 1,000 மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும். ரத்தசோகையை தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கம் ரூ.4.75 கோடியில் நடத்தப்படும்.

மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாட்கள் குறித்த விழிப்புணர்வு ரூ.1.74 கோடியில் ஏற்படுத்தப்படும் ஆகிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக, மொத்தம் ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x