Last Updated : 29 Jun, 2022 08:48 PM

 

Published : 29 Jun 2022 08:48 PM
Last Updated : 29 Jun 2022 08:48 PM

கோடநாடு வழக்கு விவகாரம்: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை

கோடநாடு எஸ்டேட்

கோவை: கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இக்கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை முதலில் கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்தது.

விசாரணை தீவிரம்: கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர்(ஐஜி), கோவை சரக துணைத் தலைவர்(டிஐஜி) ஆகியோரது நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தனிப்படை போலீஸார் இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இச்சூழலில், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும், சென்னையைச் சேர்ந்தவருமான கண்ணனிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன் பேரில், கண்ணன் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் நேற்று (28-ம் தேதி) ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று (ஜூன் 29-ம் தேதி) 2-வது நாளாக ஆஜரான ஓட்டுநர் கண்ணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜ் குறித்தும், இவ்வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகள் குறித்தும் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். காலை முதல் மாலை வரை இந்த விசாரணை நடந்தது.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறும்போது, ''கோடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஓட்டுநர் கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x