Published : 29 Jun 2022 01:29 PM
Last Updated : 29 Jun 2022 01:29 PM

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்தாலும் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “கரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 50 ஆயிரம் பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது. சுமார் 100 செவிலியர் மாணவிகள் லஸ் கார்னர் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், "தமிழக்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை வரை 8,970 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

31-வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே நோய் தடுப்பு முறை. மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் கல்வித் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டும். கூட்டத்துக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கட்சிக்காரர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அதை செய்வார்கள் என நம்புகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x