உள்ளாட்சி தேர்தல் | அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைப்பத்தில் சிக்கல்: நாளை கடைசி நாள் 

உள்ளாட்சி தேர்தல் | அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைப்பத்தில் சிக்கல்: நாளை கடைசி நாள் 
Updated on
1 min read

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை மாலைக்குள் படிவங்களை தாக்கல் செய்யாவிடில் அவர்களுக்கு இரட்டை இல்லை கிடைக்காது என்று தேர்தல் ஆணைய விதிகளில் உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (ஜூன் 30) கடைசி நாள் ஆகும்.

510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் கையொப்பமிடுவதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்றுடன் முடிந்தது. வரும் 30 ஆம் தேதிக்குள்ளாக வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாகவே படிவங்களை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணியுடன் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடையும் போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதற்குள்ளாக கட்சித்தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை மாலைக்குள் படிவங்களை சமர்ப்பிக்க தவறினால் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in