Last Updated : 28 Jun, 2022 05:39 PM

 

Published : 28 Jun 2022 05:39 PM
Last Updated : 28 Jun 2022 05:39 PM

மதிய உணவு தொடர்பாக எழுந்த அதிருப்தி: தினமும் உணவு மாதிரி அனுப்ப புதுவை முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி: தனியார் அமைப்பினர் தயாரிக்கும் மதிய உணவு தொடர்பாக அதிருப்தி எழுந்ததையடுத்து, தினமும் மதிய உணவு மாதிரியை முதல்வர், கல்வியமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். முதல் நாளாக இன்று மதிய உணவின் மாதிரியை முதல்வர் ரங்கசாமி சாப்பிட்டு பார்த்தார்.

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பகுதி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்தானது. இந்த அறக்கட்டளையானது மதிய உணவு வழங்கும் பணியை 12 மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படை தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிட்டனர். இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையற்கூடம் அட்சய பாத்ரா அமைப்புக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகே சமையல் பணிகள் தொடங்கின. லாஸ்பேட்டை சமையல் கூடத்தை பல கோடி மதிப்பில் அட்சய பாத்ரா அமைப்பினர் நவீனப்படுத்தினர். தனி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் மதிய உணவை வழங்கத்தொடங்கினர். தற்போது நடப்பு கல்வியாண்டில் புதுவையில் கடந்த 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டிப் பால், ஊட்டச்சத்து பானம் மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரசு சார்பில் காலை ரொட்டி பால் வழங்கப்படுகிறது.
அதனுடன் தனியார் அறக்கட்டளை மூலம் ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவினை அட்சய பாத்ரா திட்டத்தின் மூலம் புதுவை அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தயிர், தக்காளி, சாம்பார் சாதம் என்ற அடிப்படையில் சைவ உணவினை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவுக் கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்து அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி பெயரளவில் வழங்கப்படுவதாக பொதுநல அமைப்பினர் சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். உணவு தரம் தொடர்பாக பள்ளிகள் தரப்பில் மாணவ, மாணவிகள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துகளும் பெறப்பட்டன. இந்த நிலையில் அட்சயபாத்ரா அமைப்பினர் மாணவ, மாணவிகளுக்கு தயாரிக்கும் மதிய உணவை ஆய்வு செய்ய முதல்வர் ரங்கசாமி முடிவு எடுத்தார். அதையடுத்து இன்று மதியம் மதிய உணவு சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது.

மதிய உணவின் மாதிரியை முதல்வர் ரங்கசாமி சாப்பிட்டு பார்த்தார். இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், "இனி மாணவ, மாணவிகளுக்கு தரப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்வர் அலுவலகத்துக்கும், கல்வியமைச்சர் அலுவலகத்துக்கும் அட்சயபாத்ரா அமைப்பினர் அனுப்பி வைக்க வேண்டும். மதிய உணவின் தரத்தை தினமும் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x