

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நரிகுறவர் இன மக்களை அதிகாரிகள் தரையில் அமர வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, தேவகோட்டை வட்டம் நல்லாங்குடி பகுதியைச் சேர்ந்த நரிகுறவர் இன மக்கள் பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தனர். மனுவை பதிவு செய்தபிறகு, கூட்டமாக மனு கொடுக்க சென்றனர்.
அப்போது அவர்களை அதிகாரிகள் சிலர், மனு கொடுக்க வருவோர் அமரக் கூடிய இடத்தில் அமர வைக்காமல், தரையில் அமர வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் நரிகுறவர் இன மக்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து சிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ கூட்டமாக வந்ததால் சிலர் மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்றவர்கள் அவர்களாக தரையில் அமர்ந்துள்ளனர். அதிகாரிகள் யாரும் அவர்களை தரையில் அமரச் சொல்லவில்லை,’ என்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறுகையில், ‘ நரிக்குறவர் இன மக்களை தரையில் அமர வைத்தது தொடர்பான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.