Published : 28 Jun 2022 12:04 PM
Last Updated : 28 Jun 2022 12:04 PM

மேகேதாட்டு, அக்னி பாதைக்கு எதிர்ப்பு | மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: "காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும், கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது" என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அககட்சியின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 28) கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

> கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநாடு நடத்த இயலாத சூழலில், வரும் செப்டம்பர் 15-ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

> இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

> மதிமுக 28-வது பொதுக்குழுவின் தீர்மானத்தின்படி, கட்சியின் உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டிய சூழலில் உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர் படிவங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

> ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று மதிமுக கேட்டுக்கொள்கிறது.

> ‘இந்திய ராணுவத்தை காவிமயமாக்கு’ என்று ஆர்எஸ்எஸ் முழங்கி வருவதற்குச் செயல் வடிவம் கொடுக்க பாஜக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது. சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட் படையாக, காவிப் படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், ‘அக்னி பாதை’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.

> கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3-வது மற்றும் 4-வது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

> மத்திய பாஜக அரசின் பாராமுகம் காரணமாக நூல் விலையேற்றத்தால் ஜவுளித் தொழில் முற்றிலும் நிலைகுலைந்து வருகிறது. நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய மத்திய அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நூல் விலையை குறைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

> 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்களும், கணிதப் பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இதனை முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பின் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

> மதிமுக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி சார்பில், கட்சியின் கொள்கைவிளக்க பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x