தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? - அண்ணாமலை கேள்வி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து லாக்அப் மரணங்கள் நிகழ்ந்து வருவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில்," கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

இறந்தவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு பாஜகவின் ஆழ்ந்த இரங்கல்கள். இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது. திமுக அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது.

சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in