Published : 27 Jun 2022 07:16 AM
Last Updated : 27 Jun 2022 07:16 AM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 9-வது ஆண்டாக 100% தேர்ச்சி தரும் காஞ்சி ஏனாத்தூர் அரசுப் பள்ளி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ளது ஏனாத்தூரைச் சுற்றிலும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இதற்கு நடுவேதான் ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. 6 வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 203 மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 33 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் சந்தியா என்ற மாணவி 500-க்கு 428 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.

இந்தப் பள்ளியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 40 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை கொடுத்து வருகிறது இந்தப் பள்ளி. இந்த சாதனைப் பயணம் குறித்து தலைமை ஆசிரியர் ஜி.ஏழுமலை கூறியதாவது:

மாணவர்கள் 10-ம் வகுப்பு வந்ததும் முதல் தேர்வு வைப்போம். அதில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியாக பிரித்து, அவர்களுக்கு மாலை நேரங்களில், உணவு இடைவேளையின்போது சிறப்பு பயிற்சிகள் அளிக்கிறோம். அதற்காக சுழற்சி முறையில் ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்கின்றனர். எங்கள் பள்ளி மாணவர்கள் தனியாக பணம் கொடுத்து எந்தப் பயிற்சிக்கும் செல்வதில்லை.

சிறப்பு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ராமகிருஷ்ணா மடம் மூலம் பிஸ்கெட் உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கப்படுகின்றன. அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தன்னார்வ அமைப்பும் வாகனங்கள் மூலம் அறிவியல் கருவிகளை கொண்டு வந்து பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் 100 சதவீத தேர்ச்சி சாத்தியமாகிறது. இவ்வாறு கூறினார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வந்தச் சூழலில் ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 140 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. இப்பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு மற்றப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தப் பள்ளியில் பாதுகாவலர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே பகுந்து குழாய் உள்ளிட்ட தளவாடங்களை உடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அரசுப் பள்ளிகளுக்கு பாதுகாவலர்களும் போதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x