Published : 04 May 2016 09:13 AM
Last Updated : 04 May 2016 09:13 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரி வள்ளலார் திடலில் நேற்று நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:

மக்களுக்காக எதையும் செய்யாத ஜெயலலிதா தற்போது ஊர் ஊராகச் சென்று பொய் பேசி வருகிறார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக-வின் முழு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. பணிகள் முடியும் நேரத்தில் ஆட்சி மாறிய சூழலில் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டது. பின்னர் திமுக போராட்டங்களை அறிவித்ததால்தான் அவசர கதியில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் தற்போது, அதிமுகதான் திட்டத்தை கொண்டு வந்ததாக ஜெயலலிதா கூறுகிறார். அவருக்கு பொய் பேசுவதில் வல்லவர் என முனைவர் பட்டமே அளிக்கலாம்.

ஆட்சி முடியும் நேரத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல ஆயிரம் கோடி முதலீடு குவிந்ததாக அறிவித்தார். ஆனால் இதுவரை ஒரு தொழிற்சாலை கூட காணவில்லை. ஏழை மாணவர்களை பாதிக்கும் வகையிலான மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு பற்றி ஏதாவது கவலைப்பட்டாரா? தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் எடுத்த சட்ட முயற்சிகள் ஏழை மாணவர்கள் தொடர்பான நுழைவுத் தேர்வு விவகாரத்தில் எடுக்கவில்லையே ஏன்?

ஊழல், மக்கள் மீது அக்கறையற்ற நிர்வாகம் என நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் சிலர் மீண்டும் அதிமுக ஆட்சி வரும் என்ற நம்பிக்கையில் தங்கள் தவறுகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் அரசியல்வாதிகளை விட ஊழலில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீதுதான் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சி அமைந்தால் மக்கள் பிரதிநிதிகள் மக்களை நாடி வருவர். தவறினால் திமுக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x