Published : 03 May 2016 05:56 PM
Last Updated : 03 May 2016 05:56 PM

பிரச்சாரத்துக்கு செல்வதால் அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநருக்கு தட்டுப்பாடு: பயணிகள் பாதிப்பு

தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றுவிடுவ தால் அரசுப் பேருந்துகளை இயக்க ஓட்டுநர், நடத்துநருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்து களுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த இரு தினங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தொழிலாளர் தின விடுமுறையை முடித்துக் கொண்டு சொந்த ஊர்களில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதனால், வட மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பயணிகளை சமாளிக்க முடியாமல் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திணறினர். அனைத்து அரசுப் பேருந்துகளையும், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், கடலூர் உட்பட ஊர்களில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்து கூட்டத்தைக் குறைத்தனர்.

இதன் எதிரொலியாக, மறு நாள் (நேற்று) வழக்கமான நேரங் களில் பல்வேறு ஊர்களுக்கு செல்லவேண்டிய பேருந்துகள் இயக்க முடியாமல் போயின. அரசுப் பேருந்துகள் இருப்பு இருந்தும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இல்லாமல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தவித்தனர்.

பேருந்துகள் கிடைக்காமல் பயணிகளும் அவதிப்பட்டனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சென்றதால், ஓய்வுக்காக வீட்டுக்குச் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை செல்போனில் தொடர்புகொண்டு வரவழைத்தனர். செல்போனில் தொடர்பு கொள்ள முடியாதவர்களை, நேரிடையாகவே சென்று வரவழைத்து பேருந்துகளை இயக்கினர்.

இது குறித்து பயணிகள் கூறும்போது, “சென்னைக்கு விடுமுறை காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதற்கு 25 சதவீதம் கூடுதலாகக் கட்டணமும் வசூலிக்கப்படும். ஆனால், கடந்த 2 வாரங்களாக பேருந்துகள் கிடைக்காமல், ஞாயிற்றுக்கிழமையில் தவித்து வருகிறோம்.

பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டால், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இல்லை, அழைப்பு விடுத்துள்ளோம், விரைவில் வந்துவிடுவார்கள் என்று பதில் அளிக்கின்றனர். சங்கங்களில் உள்ளவர்கள் தேர்தல் பிரச்சாரங் களுக்கு சென்றுவிடுவதால், அவசரத் தேவைக்கு ஓட்டுநர், நடத்துநர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்கின்றனர். 2 மணி நேரம் காத்திருந்த பிறகுதான் பேருந்து வருகிறது. அதுவும், வெளியூர்களில் இருந்துவரும் பேருந்துகளை திசை திருப்பி விடுகின்றனர். இந்த நிலை தொடராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x