Published : 26 Jun 2022 05:55 PM
Last Updated : 26 Jun 2022 05:55 PM

ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்: பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

திருப்பூர்: "வரும் ஜூலை 11-ம் தேதி , நிச்சயமாக ஒரே தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் ஏகோபித்து ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், திமுகவை எதிர்க்கின்ற வல்லமை படைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்" என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " அதிமுகவை இந்த கட்சிக்கு அப்பாற்பட்ட யாரும் வழிநடத்த முடியாது. கட்சித் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும்தான் ஏகோபித்து இந்த கட்சியை நல்வழிப்படுத்திச் செல்ல முடியும். ஒட்டுமொத்தமாக 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரே முடிவாக எடப்பாடி பழனிசாமிதான் இந்த கட்சிக்கு ஒரே தலைவராக வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

வரும் ஜூலை 11-ம் தேதி , நிச்சயமாக ஒரே தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழு மூலம் ஏகோபித்து ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், திமுகவை எதிர்க்கின்ற வல்லமை படைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்.

ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிர் மூச்சாக, இன்றைக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழக மக்களின் நம்பிக்கையும் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையும் பெற்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுக எந்த சாதிக்கும், மதத்திற்கும் கட்டுப்பட்ட இயக்கம் அல்ல. அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு ஜனரஞ்சகமான கட்சிதான் அதிமுக" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x