Published : 25 Jun 2022 06:57 PM
Last Updated : 25 Jun 2022 06:57 PM

“நான் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” - விஜயகாந்த்

விஜயகாந்த்

சென்னை: தான் விரைவில் பூரண நலன் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொலைபேசி வாயிலாகவும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலைகுறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார்;

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி அனுமதிக்கப் பட்டார். நீண்ட காலமாக நீரிழிவு பிரச்சினையால் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவைச் சிகிச்சை மூலம் கால் விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x