Published : 25 Jun 2022 04:18 AM
Last Updated : 25 Jun 2022 04:18 AM

பல்கலை. திருத்தச் சட்டம் உட்பட 21 மசோதாக்கள் நிலுவை - ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்

சென்னை: 2020 ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழக திருத்தச் சட்டங்கள் உட்பட 21 சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். ஆனால், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, முதல்வர் ஸ்டாலினும் நேரில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், 2020 முதல் இந்த ஆண்டு மே 30-ம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2020 ஜனவரி 13, 18-ம் தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.

2022 ஜன.12-ல் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது.

ஏப். 28-ல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, மே 5-ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மே 12-ல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன.

மே 16-ல் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவை நிலுவையில் உள்ளன.

இவை தவிர, மே16-ல் நிறைவேற்றப்பட்ட, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, டாஸ்மாக் நிறுவன விற்று முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3-வது சட்டத்திருத்தம், 4-வது சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.

இதுதவிர, மே 24-ல் நிறைவேற்றப்பட்ட, போதைப்பொருள், வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர்பான மசோதா என மொத்தம் 21 சட்ட மசோதக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x