Published : 25 Jun 2022 06:55 AM
Last Updated : 25 Jun 2022 06:55 AM

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் மரம் சரிந்து காரில் சென்ற வங்கி மேலாளர் உயிரிழப்பு

சென்னை: கே.கே.நகரில் மரம் சரிந்து விழுந்த விபத்தில் காருக்குள் இருந்த வங்கி மேலாளர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். அவரது தங்கை காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, போரூர், மங்களம் நகர், 5-வது தெருவைச் சேர்ந்தவர் வாணி கபிலன் (57). கே.கே.நகரில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று மாலை, தனது தங்கை நெற்குன்றத்தைச் சேர்ந்த எழிலரசியுடன் (52) வங்கியிலிருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். காரை டிரைவர் கார்த்திக் ஓட்டினார். சகோதரிகள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

கார் கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையிலிருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் கர்நாடகா வங்கி அருகில் செல்லும்போது சாலையின் ஓரம் நின்ற மரம், திடீரென சாய்ந்து காரின் மேல் விழுந்தது.

இதில், காரின் பின் பக்கத்திலிருந்த சகோதரிகள் இருவரும் நசுங்கினர். கார் ஓட்டுநர் கார்த்திக் உடனடியாக கீழே இறங்கி கூச்சலிட்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்களும், கே.கே.நகர் போலீஸாரும் சம்பவ இடம் விரைந்து சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி சகோதரிகள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வாணி உயிரிழந்தார். அவரது தங்கைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டி இருந்த நிலையில் மரம் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x