Published : 06 May 2016 08:13 AM
Last Updated : 06 May 2016 08:13 AM

ஸ்ரீமுஷ்ணம் அருகே விசிக தலைவர் திருமாவளவன் வாகனம் மீது கல்வீச்சு: பதற்றம்; போலீஸ் குவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரச்சார வாகனத்தை நோக்கி கல் வீசியதாக 8 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள கொழைசாவடிக்குப்பம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருமாவளவனுக்கு பாதுகாப்பாக அவரது வாகனத்துக்கு பின்னால் ஸ்ரீ முஷ்ணம் போலீஸ் வாகனம் சென்றது. நிஜங்கன் தெரு வழியாக சென்றபோது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையில் அப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று மதியம் விழுப்புரம் சரக டிஐஜி அனிதா உசேன், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக அதே கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x