Last Updated : 24 Jun, 2022 07:10 PM

 

Published : 24 Jun 2022 07:10 PM
Last Updated : 24 Jun 2022 07:10 PM

அக்னி பாதைக்கு ஜூன் 27-ல் காங். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: சேலத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இன்ற சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை: ''தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து வரும் 27-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசின் அக்னிபாதை திட்டம் நாடு முழுவதும் இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு எதிரான திட்டமாகும் என்பதோடு வருங்கால தேர்தலை மனதில் வைத்து இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் பாஜக செயல்படுகிறது.

ஜனநாயக குரல்வலையை நசுக்கும் வகையில் அமல்படுத்தப்பட உள்ள அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் இதற்கான போராட்டத்தை அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ் சுமுக தீர்வு காண வேண்டும்: மோடி அரசின் தவறான பாதையால் பொருளாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும். பொதுத்துறை நிறுவனங்களை அழித்து தனியார் வசம் கொடுக்கின்றனர். அதிமுக-வில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வுக்கு கொண்டுவர வேண்டும். இருவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து கட்சியை வழிநடத்த முன்வரவேண்டும்.

எதிர்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் பாஜக: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரஸ் கட்சியின் சொத்து. அதன் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது, காங்கிரஸ் வசமே உள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக தெரிவித்த கருத்தை மறைக்க, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணையை ஏவிவிட்டு, திசை திருப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் ஜனநாயகத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக, அனைத்து மாநிலத்திலும் தனது சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது. மகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

நளினியை விடுவிப்பதில் தவறில்லை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்க்கவில்லை. அவரை விட அதிகம் குற்றம் புரிந்த பேரறிவாளனே விடுவிக்கப்பட்டு விட்டார். நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. அவரை விடுவிப்பதில் தவறில்லை. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் உள்ள உள்ள இஸ்லாமிய இளைஞர்களையும் விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இதனை காங்கிரஸ் கோரிக்கையாக அரசுக்கு முன் வைக்கிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். திமுக ஓராண்டில் எந்தளவு திட்டங்களை நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவு திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். வரும் ஆண்டுகளில் மீதியுள்ள திட்டங்களை நிறைவேற்றுவேர். தமிழகத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில், பாஜக கொள்கையை முறையாக பின்பற்றியுள்ளது. திரவுபதி என்ற பெயருக்காக அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்” என்று அவர் கூறினார். உடன் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர்கள் பாஸ்கர், ஜெய்குமார் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x