

சென்னை: “ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இடஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூக நீதியை நிலைநாட்ட பள்ளிக் கல்வித் துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது.
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69% இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை என்பதுதான் வேதனையான உண்மை!
ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இடஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.