Published : 11 May 2016 08:41 AM
Last Updated : 11 May 2016 08:41 AM
ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என தமிழகம் முழுவதும் 1.60 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16-ம் தேதி நடக்கிறது.முந்தைய தேர்தல்களில் ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. அதேநேரத்தில், பணம் வாங்கக் கூடாது என வாக்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதற்காக இளைஞர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோரை வற்புறுத்துமாறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடி வாக்காளர்கள் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்கச் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத் தில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி ஏற்றனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒவ்வொரு துறையின் செயலாளர் கள், துறை பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். மாநிலம் முழு வதும் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள், தனியார் நிறுவனங் கள், கல்லூரிகள், ரயில் நிலையங் கள், பேருந்து நிலையங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொகுதிகள்தோறும் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஏற்பாட்டின் பேரில் குறைந்தபட்சம் 100 வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர். இவை தொடர்பான புகைப்படங்கள் தேர்தல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா சங்கங்களிலும் அவற்றின் உறுப் பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 2.34 கோடி வாக்காளர்களை உறுதிமொழி ஏற்கச் செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்’’ என்றார்.
சென்னை மாநகராட்சி
சென்னை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பி.சந்தரமோகன் தலைமையில், ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘போடுவோம் ஓட்டு.. வாங்க மாட்டோம் நோட்டு’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 1,560 மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT