Published : 24 Jun 2022 06:19 AM
Last Updated : 24 Jun 2022 06:19 AM

முதல்வர் திறந்து வைத்த பின்பும் பயன்பாட்டுக்கு வராத சிங்கம்புணரி வாரச்சந்தை: சாலையில் கடைகள் அமைத்ததால் பள்ளி மாணவிகள் சிரமம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பின்பும் வாரச்சந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் சாலையோரத்தில் சந்தை நடக்கிறது. இதனால் பள்ளி மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதற்காக பேருந்து நிலையம் அருகே ரூ.3 கோடியில் வாரச்சந்தை கட்டப்பட்டது. மொத்தம் 152 கடைகள் உள்ளன.

இந்த வாரச்சந்தை கட்டிடத்தை கடந்த ஜூன் 8-ம் தேதி சிங்கம்புணரி சமத்துவபுரம் திறப்பு விழாவுக்கு வந்தபோது, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பிறகு 2 வாரங்களாகியும் வாரச்சந்தை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் அருகேயுள்ள சாலையில் வாரச்சந்தை நடந்து வருகிறது. சாலையை மறைத்து கடைகள் அமைக்கப்படுகின்றன. இச்சாலையில்தான் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

தற்போது பள்ளி திறக்கப் பட்டுள்ள நிலையில் மாணவிகள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

வாரச்சந்தை புதிய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x