Published : 23 Jun 2022 08:34 PM
Last Updated : 23 Jun 2022 08:34 PM

குடியரசுத் தலைவர் தேர்தல் | “வாய்ச்சொல்லில் மட்டுமே திமுக, விசிக, காங். கட்சிகளின் சமூக நீதி” - அண்ணாமலை

சென்னை: "இந்திய குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து உயர்சாதி வகுப்பினரை வேட்பாளராக நிறுத்தும் திமுக, திருமா, காங்கிரஸ் கட்சிகளின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, "பாஜக சார்பில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா மாநிலத்தின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவராக முன்மொழியப்பட்ட சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்டனர்.

குடியரசுத் தலைவராகப் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச தகுதியுள்ள வேட்பாளரை தேர்வு செய்ய இயலாமல், நேற்றுவரை பாஜகவில் இருந்த உயர்சாதி இனத்தவரான யஷ்வந்த் சின்ஹாவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவலநிலை எதிர்கட்சிகளு்ககு ஏற்பட்டுள்ளது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று இதுவரை பேசிய திமுக, திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்கப் போகின்றனர்.

இந்தியாவில் பத்துகோடிப் பேருக்கு மேல் பழங்குடி இனத்தவர் இருந்தபோதிலும் அவர்களில் ஒருவர்கூட இதுவரை ஜனாதிபதி ஆனதில்லை.பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி.ஏ.சங்மாவை பாஜக நிறுத்தியபோது வைதீகரான பிரணாப் முகர்ஜியை நிறுத்தி காங்கிரஸ் கட்சி பழங்குடியினத்தவரான சங்மாவைத் தோற்கடித்தது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்த பட்டியலைப் பார்த்தால் தெரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

தற்போது பாஜகவின் சார்பில், மீண்டும் ஒரு பழங்குடி இன வேட்பாளர், ஒடிசா மாநிலத்தின் ஒரு பெண்மணியை திரவுபதி முர்மு என்பவரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அடையாளப்படுத்தியிருக்கிறது. இம்முறை பாஜகவின் பழங்குடியின வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், எதிர் அணியின் வேட்பாளர் வெற்றிபெற முடியாது என்பது தெளிவான நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின், பழங்குடியினப் பெண் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்து, போட்டியின்றி வெற்றி பெற துணை நிற்க வேண்டாமா?

ஒரு பழங்குடியின வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதை எதிர்ப்பவர்களா சமூக நீதியின் காப்பாளர்கள். திமுகவும், காங்கிரசும் சமுதாயத்தில் அடித்தட்டிலிருந்து மேலே வந்தால்கூட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஆதரவு தருவார்கள்.மற்றவர்கள் எப்போதும் போல தாத்தா காலத்தில் இருந்து வழிவழியாக போஸ்டர் ஒட்டுவதற்கும், அடுத்த தலைவர் வாழ்க என கோஷம் போடவும், அடிமட்ட வேலை செய்ய மட்டுமே இங்கு அனுமதி உண்டு.

கிறிஸ்தவரை முன்னிறுத்தினால்தான் ஆதரிப்பேன் என்ற திருமாவளவனின் நிலை மாறிவிட்டதா? இந்திய ஜனாதிபதியாக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து உயர்சாதி வகுப்பினரை போட்டியில் எதிராக நிறுத்தும், திமுக, திருமாவளவன், காங்கிரஸ் கட்சிகளின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் இருப்பது சமூகநீதியா சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம். உயர் சாதி வேட்பாளரை ஆதரித்து, பட்டியலினத்தின் மலையகமகளை மறுக்கும் திமுகவும், திருமாவும், காங்கிரசும் இனி சமூக நீதிக்கும் புதிய மாடல் உருவாக்கப்போகிறார்கள் போலும்.

திமுக எப்போதுமே தமிழுக்கும் தாழ்நிலை மக்களுக்கும் சிறுபான்மை இனத்துக்கும், எதிராகத்தான் செயல்படும். தமிழ் தமிழ் என்பது பேச்சளவில் நின்றுவிடும்.இதற்கு முன்னர் இதே குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு ஓட்டு போடாமல், கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணய்யருக்கு ஓட்டு போட்டது.அப்புறம் சிறுபான்மைக் காவலராக காட்டிக்கொள்ளும். ஆனால் சிறுபான்மை இனத்தவரான, தமிழரான அப்துல் கலாமுக்கு ஓட்டுப் போடாமல்,லஷ்மி செய்ஹலுக்கு ஓட்டு போட்டது. வழக்கம் போல ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான சமூகநீதி என்றெல்லாம் திமுக, திருமா, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போடும் பல கோஷம் அதெல்லாம் நிஜமான வேஷம்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பெண்மணியை இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்த முன்வந்த பிரதமரையும், நம் பாஜகவின் அனைத்திந்தியத் தலைவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். உண்மையான சமூக நீதி காத்த உத்தமராக, மகளிருக்கு மாண்பு சேர்த்த மனிதருள் மாணிக்கமாக, பிரதமர் நரேந்திர மோடி குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிவீசுகிறார்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x