Published : 22 Jun 2022 06:47 AM
Last Updated : 22 Jun 2022 06:47 AM

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் யோகாசனம்: பள்ளி, கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகங்களிலும் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி யோகாசனங்கள் செய்தார். பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 8-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் காலை 6.30 மணி அளவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பல்வேறு ஆசனங்கள் செய்ய யோகா ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஆளுநர் ரவியும் யோகா செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தேசிய சித்த மருத்துவத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி துறை இணை அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சிகளை செய்தனர். கடற்கரை கோயில்வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மத்திய அரசு ஊழியர்கள்உட்பட சுமார் 1,000 பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார்.

சென்னையில் உள்ள தெற்குரயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா (பொறுப்பு) தலைமை வகித்தார். பயிற்றுநர்களின் வழிகாட்டுதலுடன் யோகாசனங்களை ரயில்வே ஊழியர்கள் செய்தனர்.

சென்னையில் தனியார் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உணவு,நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகம், ஜிஎஸ்டி பவனில்நடந்த யோகா நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமையில் 100 ஊழியர்கள் பங்கேற்று யோகா பயிற்சிகள் செய்தனர்.

ரயில்வே காவல் துறை கூடுதல் டிஜிபி வனிதா மற்றும் காவல் துணைத் தலைவர் அபிஷேக் தீக்‌ஷித் உத்தரவின்பேரில், காவல்கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் சென்னை எழும்பூரில் ரயில்வே பெண் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகள், விமான நிலையம், பூங்காக்கள் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, யோகா தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் யோகா செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அலைபாயும் மனதையும், அயர்ச்சி அடையும் உடலையும் அமைதிப்படுத்தி, ஆரோக்கியத்துடன், ஆயுளை நீட்டிக்கும் அற்புதக் கலை யோகா. இதை அகிலம் அறியச் செய்த நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது நமக்கு பெருமை.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நோயில்லா வாழ்க்கையை உறுதி செய்ய நமது சித்தர்கள் உருவாக்கிய அற்புதக் கலை யோகாசனம். இது உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அருமருந்து. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். உலக யோகா நாளான இன்று (நேற்று) முதல் அனைவரும் யோகாசனம் செய்வோம். உடல், மனநலம் காப்போம்.

பாமக தலைவர் அன்புமணி: யோகாசனம் என்பது உலகுக்கு இந்தியா தந்த கொடை. தீரா நோய்களை கட்டுப்படுத்த யோகா அருமருந்து. இதன் பயனை அனைவரும் பெற வேண்டும். அதற்காக அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x