Published : 21 Jun 2022 03:32 PM
Last Updated : 21 Jun 2022 03:32 PM

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆவணங்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்தப் புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்க கோரி தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், புகாரில் முகாந்திரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்க மறுத்ததை எதிர்த்து வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆவணங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் நகலை முன்னாள் அமைச்சருக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது வேலுமணி தரப்பில் "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கையை வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், " வழக்கு ஆவணங்களைப் பெற வேலுமணி தரப்புக்கு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வேலுமணி தரப்புக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x