Published : 21 Jun 2022 06:09 AM
Last Updated : 21 Jun 2022 06:09 AM

மாணவர்கள் தோல்வியை கண்டு ஒருபோதும் துவளக்கூடாது: அமைச்சர் பொன்முடி அறிவுரை

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். அருகில் ஆட்சியர் மோகன்.

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், ஆட்சியர் மோகன், ரவிக்குமார் எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது:

முயற்சி மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியை கண்டு ஒருபோதும் துவளக்கூடாது. இளையதலை முறையினருக்கு பெற்றோரும், அரசும்உறுதுணையாக, நல்ல வழிகாட்டுதலாக இருந்துவருகிறார்கள். இதை பயன்படுத்தி நன்றாக படித்து தங்களின்லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இளங்கலையில் 2013 - 2016-ம் கல்வி ஆண்டில் 343 மாணவ, மாணவிகளுக்கும், 2014 - 2017-ம் கல்வி ஆண்டில் 261 பேருக்கும், 2015 - 2018-ம் கல்வி ஆண்டில் 258 பேருக்கும், 2016 - 2019-ம் கல்வி ஆண்டில் 393பேருக்கும், 2017 - 2020-ம் கல்விஆண்டில் 758 பேருக்கும் எனமொத்தம் 2013 மாணவ, மாணவிகளுக்கும், முதுகலையில் 2016 - 2018-ம் கல்வி ஆண்டில் 46 மாணவ, மாணவிகளுக்கும், 2017 - 2019-ம் கல்வி ஆண்டில் 63 பேருக்கும், 2018 - 2020-ம் கல்வி ஆண்டில் 78 நபர்கள் என மொத்தம் 2, 200 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இவ்விழாவில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன், கல்லூரிகள் கல்வியியல் இணை இயக்குநர் காவேரிஅம்மாள், பதிவாளர் விஜயராகவன், முதல்வர் நாகலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x