Published : 20 Jun 2022 12:58 PM
Last Updated : 20 Jun 2022 12:58 PM

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23-ம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களான 2,500 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது அவசியம். எனவே, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி கடந்த 7-ம் தேதி தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், கடந்த 15-ம் தேதி மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

எனவே, வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி சதீஷ்குமாரிடம் இன்று முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனுவை வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x