Published : 20 Jun 2022 08:00 AM
Last Updated : 20 Jun 2022 08:00 AM

“பொள்ளாச்சியில் பற்ற வைக்கப்பட்ட 2024 மக்களவை தேர்தலுக்கான தீப்பொறி” - அண்ணாமலை பேச்சு

பொள்ளாச்சி: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்.பி.க்கள் டெல்லி செல்வார்கள் என்று, கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், வினோஜ் பி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது: பொள்ளாச்சி ஒரு விவசாய பூமி. இங்கிருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்கின்றனர். அதை போலீஸார் தடுப்பது இல்லை. கடந்த 8 ஆண்டுகளில் கொப்பரை தேங்காயின் ஆதார விலையை ரூ.54 ல் இருந்து ரூ.104 ஆகஉயர்த்தி உள்ளோம். கூடிய விரைவில் ரூ.150 ஆக நிர்ணயிக்கப்படும்.

திமுக ஆட்சியில் ஓராண்டிலேயே மக்களுக்கு சலிப்பு தட்டி விட்டது. ஆனால் மோடி ஆட்சியின் 8 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு சலிப்பு ஏற்படவில்லை. புதிது புதிதாக ஊழல் செய்வதில் திமுகவினர் பிஎச்டி முடித்துள்ளனர்.

இந்தியாவின் துணைப் பிரதமர் ஆகலாம் என்ற கனவை கைவிட்டு விடுங்கள். நீட் தேர்வை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. இவர்களுக்கு பின்னால் சில ஆடுகளும் செல்கின்றன. அதனை நாங்கள் எச்சரிக்கிறோம். அவர்கள் அதை கண்டுகொள்வது இல்லை.

தென்னை நார் தொழிலை ஆரஞ்சு மதிப்பிற்கு கொண்டு வந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையை இழக்க செய்துள்ளனர். 2024 ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தீப்பொறி பொள்ளாச்சியில் பற்ற வைக்கப்பட்டுள்ளது. அது தமிழகம் முழுவதும் பரவும். தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்வார்கள்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார். மாநாட்டில், மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராசலம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் என்.ஆர்.நஞ்சப்பன், பாபா ரமேஷ், முத்துராமலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x