

சென்னை: 18 வயது முழுமையடையாத மற்றும் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “அண்மையில் 18 வயது நிறைவடையாத பல இளைஞர்கள் வாகனங்களை இயக்கி வருவதை காண முடிகிறது. இது சட்டப்படி குற்றம்.
எனவே, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
எனவே, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை பெற்றோர் கண்காணித்து தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
சென்னை வேப்பேரி ஈவிஆர் சாலையில் உள்ள சங்கேஸ்வரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையிலான போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து விதிகள் பற்றி விளக்கினர்.
18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களிடம் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், அதன் விளைவுகள் பற்றியும், குடியிருப்பு பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.