ஊத்தங்கரையில் கனமழை: 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

ஊத்தங்கரையில் பெய்த கனமழையால், பரசனேரி நிரம்பி அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உபரி நீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.
ஊத்தங்கரையில் பெய்த கனமழையால், பரசனேரி நிரம்பி அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உபரி நீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.
Updated on
1 min read

ஊத்தங்கரையில் பெய்த கனமழையால், பரசனேரி நிரம்பி உபரி நீர் வெளியேறி 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர். இதனை சீர் செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு, ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள பரசனேரி நிரம்பியது. ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாயில் அடைப்பும், நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பால், ஏரிக்கரை அருகே உள்ள அண்ணாநகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதியுற்றனர். மேலும், அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமணன் (52) என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரது சடலத்தை எடுத்துச் செல்ல வழி இல்லாததாலும், தனிநபர் நீர்வழித்தட ஆக்கிரமிப்பினை அகற்ற வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் போலீஸார் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in