

சென்னை: சதுப்பு நிலப்பகுதியை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்றிய வருவாய் துறையின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள 38 ஏக்கர் சதுப்பு நிலப் பகுதியை, கழுவேலி நிலம் என வகைப்படுத்தியுள்ள வருவாய் துறை, அதில் 8 ஏக்கரை தரமணியில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்றம் செய்து கடந்த 2014 மே 16 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனரான ஐ.ஹெச்.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘‘பக்கிங்ஹாம் கால்வாயில் வரும் உபரிநீர், துரைப்பாக்கம் - ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்க பயன்படும் கழுவேலி மற்றும் சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, அந்த நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு மாற்றம் செய்து வழங்கி யிருப்பது சட்ட விரோதம்.
சதுப்பு நிலப் பகுதியை அறிவிப்பு செய்து பாதுகாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கெ னவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சதுப்பு நிலப் பகுதியை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு வழங்குவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.