Published : 18 Jun 2022 01:39 PM
Last Updated : 18 Jun 2022 01:39 PM

சென்னையில் நடப்பாண்டில் 163 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது: காவல்துறை

சென்னை: சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 163 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 11 குற்றவாளிகள் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 109 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 35 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 11 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 163 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள், வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 11 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள் திருந்தி வாழ்வதற்காக, சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்தும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை, செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்கள், 1 வருடத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாது சிறை தண்டனை விதித்து, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்பேரில், கடந்த ஒரு வாரத்தில், பிணை பத்திரம் மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் பிணையில் வரமுடியாத தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x