Published : 18 Jun 2022 07:39 AM
Last Updated : 18 Jun 2022 07:39 AM

மேட்டூர் அணை, கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணையக் குழு ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையக் குழுவினர்.படம்: ஆர்.வெங்கடேஷ்

சேலம்/தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையிலான ஆணையக் குழுவினர் மேட்டூர் அணை மற்றும் கல்லணை பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், அணைகளில் உள்ள நீர்இருப்பு விவரங்கள், பாசனத்துக்கான நீர் தேவை, நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பிலிகுண்டுலுவிலும், நேற்று மேட்டூர் அணையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அணையின் நீர் அளவீட்டு மானி, வலது கரை, சுரங்கம், நில அதிர்வு கருவி, அணை மதகுகள் உள்ளிட்டப் பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், மேட்டூர் அணை நீர் வளத்துறை அலுவலகத்தில் உள்ள வெள்ள நீர் கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக் கால்வாய் ஆற்றின் தலைப்பு பகுதிக்கு சென்றுஆய்வு செய்தனர். பின்னர், கல்லணையில் உள்ள ஆய்வு மாளிகையில் தமிழக நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

விவசாயிகள் மனு

அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் வெ.ஜீவக்குமார், பூ.விசுவநாதன் ஆகியோர் எஸ்.கே.ஹல்தரை சந்தித்து மனு அளித்தனர். தமிழகத்தில் காவிரியை நம்பி 20 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்தோம். போதிய நீர் இல்லாத காரணத்தால் தற்போது பாசன பரப்பு12 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக்குறியாகும் என அவர்கள் கூறினர்.

குழுவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், ஆணையத்தின் தலைவர்எஸ்.கே.ஹல்தர் கர்நாடக அரசுக்குஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வலியுறுத்தி கல்லணையில் ஆய்வுக்கு வந்த ஆணையக் குழுவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

‘மேகேதாட்டு அணை குறித்து விவாதிப்போம்'

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கல்லணை பகுதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் வரும் 23-ம் தேதி ஆணையத்தின் கூட்டம் நடைபெறும்போது, மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கப்படும்.

இந்த அணையை கட்டக்கூடாது என விவசாயிகள் கல்லணையில் நடத்திய போராட்டம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பாகும். எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, நீர் பங்கீடை செயல்படுத்துவதுதான் எங்கள் பணி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x