Published : 18 Jun 2022 06:29 AM
Last Updated : 18 Jun 2022 06:29 AM

நீலகிரியில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு: 30 சதவீதம் விநியோகம் குறைவு

உதகை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்டமாநிலங்களில் பல விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் ஓரிரு மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டநிலையில், நீலகிரி மாவட்டத்தில் தட்டுப்பாடு உறுதியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் சாதாரண பெட்ரோல் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பவர் பெட்ரோல் விநியோகம் மட்டுமே உள்ளது. இதனால், இங்கிருந்து செல்லும் காய்கறி வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட பெட்ரோல் பங்க்குகள் விற்பனை நிலையத் தலைவர் வெங்கடேஷ் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் 26 பெட்ரோல்விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் 15-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் பங்க்குகளிலும் தட்டுப்பாடு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விநியோகம் 30 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இப்பிரச்சினை இந்தியன் ஆயில் நிறுவனங்களுக்கு இதுவரை வரவில்லை. அதே சமயம், இந்துஸ்தான் பெட்ரோலியம் பங்க்குகளில் மொத்தமாக எரிபொருள் நிரப்புபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு வருகின்றனர். இதனால், அங்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x