Published : 17 Jun 2022 04:35 AM
Last Updated : 17 Jun 2022 04:35 AM

திமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு - துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்லில் ஜூலை 3-ம் தேதி நடக்க உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் பெரும்பாலான உள்ளாட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கான சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு தலைப்பில் சிறப்புரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. ஜூலை 3-ம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை, நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பொம்மக்குட்டையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று மாநாட்டில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x