

காஞ்சிபுரம்: உத்தரப்பிரதேசத்தில் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது.
காஞ்சிபுரம், வடிவேல் நகர், விரிவாக்கப் பகுதி, குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் அப்பாண்டை ராஜ். இவரது மகன் ரமேஷ்(58). இவர் உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி முகாமில் இந்திய - திபெத்திய எல்லை பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணிபுரிந்துவந்தார். இவர் கடந்த 14-ம் தேதி, பணியாற்றிய இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ரமேஷின் உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமில் இருந்து கொண்டு வரப்பட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. திடீரென்று ரமேஷ், எல்லை பாதுகாப்பு படை முகாமில்உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.