Published : 16 Jun 2022 07:23 PM
Last Updated : 16 Jun 2022 07:23 PM

குயின்ஸ்லேண்ட் பூங்காவை காலி செய்ய தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணு கோபாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, பூங்கவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோயில்களுக்கு சொந்தமான நிலம் அல்ல. இந்த நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானதா, அறநிலைய துறைக்கு சொந்தமானதா என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நில உரிமை தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x