Published : 16 Jun 2022 08:23 AM
Last Updated : 16 Jun 2022 08:23 AM

திருப்பூர் | 12 அங்கன்வாடி மையங்களில் மின் வசதி இல்லாததால் குழந்தைகள் அவதி: நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்படுமா?

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்துக்கு வரும்வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், நகரமும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர்.

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கல்வி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மொழி, அறிவு மற்றும் சமூக மன எழுச்சி வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு அடித்தளமாக இருப்பவை அங்கன்வாடி மையங்கள். இந்நிலையில், திருப்பூர் மாநகரில் கேவிஆர் நகர், பூச்சிக்காடு உட்பட 12 அங்கன்வாடி மையங்களில் மின் வசதி இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர மக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சிகேவிஆர் நகரில் செயல்படும் அங்கன்வாடி மையத்தை நம்பி, அப்பகுதியில் தொழிலாளர் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது வரை 30 குழந்தைகள் படித்து வரக்கூடிய சூழலில், அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் மின் விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் குழந்தைகள் தவித்துவருகின்றனர். இதேபோல, மாநகர்முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின் வசதி இல்லாததால்,நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.

எங்களது மூத்த குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்தபோதும் மின் வசதி இல்லை. 7 ஆண்டுகள் கழித்து தற்போதும் மின்வசதி இல்லை. இதனால், பெற்றோர் பலர் தங்களது குழந்தைகளை வேறு பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகளிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும்" என்றனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (திருப்பூர் மாநகர்) ஜெயலதா ’இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "திருப்பூர் மாநகரில் 12 அங்கன்வாடி மையங்களில் மின் வசதி இல்லை. மின்சாரத்துக்கான வைப்புத்தொகை தலா ரூ.2,800 வீதம், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இருந்து நிதி வந்துள்ளது. ஆனால், மின்வசதிக்கு ஆன்லைன் முறையில் தான் பதிவு செய்ய முடியும் என்பதால், 12 மையங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் வெவ்வேறு விதமான தகவல்கள், நடைமுறை சிக்கல்களால், மின் வசதி ஏற்படுத்த முடியவில்லை. யார் பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. மின் ஒயர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து பணிகளையும் முடித்து வைத்துள்ளோம். தற்போதுகுழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வரத் தொடங்கியிருப்பதால், சாப்பிட்ட பின் சில குழந்தைகள் தூங்கும். எனவே மின் விசிறி, மின்விளக்கு உள்ளிட்டவை தேவை.

இதுதொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து, மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பேசி 12 அங்கன்வாடி மையங்களுக்கும் மின் வசதி ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x