Published : 16 Jun 2022 01:36 PM
Last Updated : 16 Jun 2022 01:36 PM

சென்னையில் பூங்காவை முறையாக பராமரிக்காத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1.54 லட்சம் அபராதம் 

சென்னை: சென்னையில் பூங்காவை முறையாக பராமரிக்காத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, பூங்காத் துறையின் சார்பில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கு இடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

இந்த விதிகள் தொடர்பாக பூங்காத் துறையின் சார்பில் கடந்த 29-ம் தேதி முதல் 10ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1,54,718/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x