அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வேதனை

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பால் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வேதனை
Updated on
1 min read

சென்னை: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலைப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்து சாயிரா பேகம் என்பவர் கட்டியிருந்த கட்டிடத்துக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், அந்த நிலத்தை அண்ணாமலை என்பவர் வாங்கியதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, "இயற்கை கொடையாக அளித்த பல நீர்நிலைகள் தமிழகத்தில் உள்ளன.

இருப்பினும் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இதற்கு முக்கியக் காரணம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசுஅதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கடமையைச் செய்வதில்லை.

அவர்கள் அரசிடம் ஊதியம் பெறுவதும் எதற்காக என்ற கேள்விக்குறி எழுகிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது" என கருத்து தெரிவித்தார்.

அதையடுத்து இந்த வழக்கைவாபஸ் பெறுவதாக மனுதாரர்தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அதிகாரிகள் தங்களது பணியை செய்வதில் குறைபாடு இருந்தால் அதற்கு அரசுதான் காரணம் என்றும், அந்தகுறைபாடுகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும்,அதிகாரிகளும் பொதுமக்களுக்கான தங்களது கடமையை முறையாக செய்வதில்லை எனவும் குற்றம்சாட்டினர். அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்காமல் பணிபுரியும் சில நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர். இதே நிலைதான் நாடு முழுவதும் நிலவுகிறது, எனவும் கருத்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in